ஆந்திராவில் 80 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமை!

Filed under: இந்தியா |

13 வயது சிறுமியை ஆந்திராவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 80 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் 13 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் தன் தாய், தந்தையரோடு வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் தாய் உடல்நலக் குறைவால் இறந்த நிலையில் தந்தையோடு வசித்து வந்துள்ளார் சிறுமி. சிறுமியின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பழக்கமான சொர்ணகுமாரி என்பவர் சிறுமியை தத்தெடுத்துக் கொள்வதாக சிறுமியின் தந்தையிடம் கேட்க அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் சிறுமியை அழைத்து சென்ற சொர்ணகுமாரி விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

ஆதரவற்ற அந்த சிறுமியை கடந்த 6 மாதத்திற்குள்ளாக 80க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்நிலையில் எப்படியோ அந்த கும்பலிடமிருந்து தப்பிய சிறுமி தனது தந்தையிடம் சென்று தனக்கு நடந்தவைகளை கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சொர்ணகுமாரி மற்றும் அவருக்கு உடந்தையாய் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் 21 பேரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான நிலையில், இந்த குற்ற செயலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.


அதன்பேரில் 35 விபச்சார ஏஜெண்டுகள் மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 80 பேர் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தேசத்தையே பெரும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.