இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா!

Filed under: சினிமா,சென்னை |

இசை ரசிகர்களுக்கு எப்போதும் எவர் கிரீன் ஹிட் கொடுப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

‘ஹி1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசை துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, உலக அளவில் நற்பெயரை சம்பாதித்த பத்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நாய்ஸ் & கிரைன்ஸ் எனும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி குறித்து பத்திரிக்கையாளரிடம் இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “இந்நிகழ்ச்சி எனக்கு மிகவும் சிறப்பானது.‌ கடந்த முறை சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, எனக்கும்- ரசிகர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே தருணத்தில் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விரும்பினேன். என்னுடைய விருப்பத்தை நாய்ஸ் & கிரைன்ஸ் குழுவினரிடம் தெரிவித்தேன். அந்த தருணத்தில் 360 டிகிரி வடிவிலான மேடையை அமைப்பது குறித்து விவாதித்தோம். இந்த புது அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன். இந்த இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது ரசிகர்களையும், என்னையும் உற்சாகப்படுத்தும். ஜூலை 27ம் தேதியன்று ஒய் எம் சி ஏ மைதானத்தில் சந்திப்போம்” என்றார்.