அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, ஜூலை 29-

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளையில், சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களை, குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள், நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்து, சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக, அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அந்த நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவை அமல்படுத்தாமல் இருந்து வருவதாக அறநிலையத்துறைக்கு எதிராக சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், `கோயில் இடங்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நேற்ற்று மீண்டும் விசாரித்த உயர் நீதிமன்றம், “உத்தரவை அமல்படுத்த ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்கள் முறையாக தெரிவிக்கப்படவில்லை. எனவே, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தது.