எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னால் நாடு முழுவதும் 1500 என்ற கணக்கில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது ஐயாயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. திருவள்ளூர் எம்.பி.ஜெயக்குமார் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். திடீரென அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் டில்லியிலுள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் முழுவதுமாக குணமாகியவுடன் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.