திருவிழாக்களில் நாடகங்களுக்கு அனுமதி!

Filed under: தமிழகம் |

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கோவில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நாடகங்களை நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கருப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவின்போது கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் மற்றும் நாடகங்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை கடந்த வாரம் விசாரித்த தனி நீதிபதி, ஆடல் பாடல் நாடகங்களை சில நிபந்தனைகளுடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கினார். நிபந்தனையின்படி, “ஆடல் பாடல், நாடக நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இருக்கக்கூடாது. இந்நிகழ்ச்சிகளை இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை நடத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பில், “கோயில் திருவிழாக்களின்போது நாடகங்களை நடத்த இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை நடத்துவது சிரமம். இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என மேல்முறையீடு செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், “கோயில் திருவிழாக்களின்போது நாடகங்களை இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.