ஐஆர்சிடிசி இணையதளத்தில் பண மோசடி?

Filed under: சென்னை |

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் கணக்கிலிருந்து ரூ.1.8 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பல ஆயிரக்கணக்கான ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் ஐஆர்சிடிசி தளத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். பின்னர் அதை ரத்து செய்து ரீஃபண்ட் பெறுவதற்காக ஐஆர்சிடிசியின் இணையதளம் சென்றுள்ளார். அதில் உதவிக்கு என்று பதிவிடப்பட்டிருந்த எண்ணுக்கு அழைத்து டிக்கெட் ரத்து மற்றும் ரீஃபண்ட் குறித்து பேசியுள்ளார். அவர்கள் ஸ்ரீதரனின் வங்கி விவரங்களை கேட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் ஸ்ரீதரன் வங்கி கணக்கிலிருந்து ரூ.1.8 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் தி.நகர் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது அந்த உதவி எண்ணை ஐஆர்சிடிசி நிர்வாகம் இணையதளத்தில் பதிவிடவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் இணையதளத்தை யாராவது ஹேக் செய்து அந்த எண்ணை உதவி எண் என உள்ளீடு செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.