தமிழக அரசு இடம் ஒதுக்கியவுடன் கடற்பாசி பூங்கா அமைக்கும் பணி தொடங்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் !

Filed under: இந்தியா,சென்னை,தமிழகம் |

மீனவர்களின் நலனுக்காக தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள கடல்பாசி வளர்க்கும் சிறப்புப் பூங்காவுக்கான நிலத்தை தேர்வு செய்து கொடுக்க தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிலம் ஒதுக்கியப் பின் அதற்கானப் பணிகள் தொடங்கும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  அவர் இதனைக் கூறினார். பிரதமர் மோடியின் தலைமையிலான இந்த அரசு மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி அவர்களுக்கு பல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 20 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்யப்பட உள்ளது.
ராமேஸ்வரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மீன் வளத்தை அதிகப்படுத்தும் வகையில் தரமான மீன் குஞ்சுகளை கடலில் விட்டு வளர்க்கும் திட்டம் பிரதமரின் மத்திய சம்படா யோஜனா திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்பதனக் கிடங்கு அமைத்தல், மீன் பதப்படுத்தும் நிலையம் அமைத்தல், ஆழ்கடல் மீன் வளர்ப்பு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ஆயிரத்து 500 ரூபாய் வழங்குகிறது. மீனவர்களுக்கு குரூப் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது என்று கூறிய அவர்,
மத்திய அரசு தமிழகத்திற்கு அனைத்து திட்டங்களையும் வழங்கி வருகிறது மத்திய அரசின் திட்டங்களில் அதிக பயனாளிகள் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. நெடுஞ்சாலை, அனைவருக்கும் வீடு திட்டம், ஜல் ஜீவன் மிஷன், மருத்துவக் காப்பீடு, முத்ரா கடன் உதவி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி என எந்த ஒரு திட்டத்திலும் அதிகப் பயனாளிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்றார்.

தமிழகத்தில் மீனவர்களின் நலனுக்காக கடல்பாசி வளர்ப்பதற்காக சிறப்பு மண்டலம் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். அவர்கள் தேர்வு செய்து அனுப்பிய பின்னர் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.