சென்னையில் 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது!

Filed under: சென்னை |

77 குற்றவாளிகள் சென்னையில் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்திப்ராய் ரத்தோர், அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-ஆக இருந்த அருண், சென்னை புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தனது முதல் பேட்டியிலேயே ஆணையர் அருண் ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். சென்னையில் ரவுடிகளை களையெடுக்கும் பணி தொடங்கியது. சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிராக 14.07.2024 மற்றும் 15.07.2024 ஆகிய இரண்டு நாட்கள் தீவிர தணிகைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சிறப்பு சோதனையில் 77 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனராம். மேலும் நான்கு குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தி எச்சரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தேர்தல் வேட்டையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.