தங்கர்பச்சானின் பிரச்சாரத்தால் பரபரப்பு!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

கடலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தங்கர்பச்சான் “எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உங்களுக்கு தான் பிரச்சனை” என்று பிரச்சாரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் பாராளுமன்ற தொகுதி தொகுதியில் பாமக வேட்பாளராக திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் களம் இறங்கியுள்ளார். அவரது பிரச்சாரத்தில், “நான் ஏழு வயதில் பார்த்த கடலூர் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எத்தனை தேர்தல் வந்தாலும் எத்தனை தலைவர்கள் வந்தாலும் இந்த பகுதி மாறவே இல்லை. வளர்ச்சி பெறவில்லை, தலைவர்களின் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து போயிருக்கிறோம், அந்த கோபத்தின் வெளிப்பாடாக நானே இப்போது இந்த தொகுதியின் வேட்பாளராக இருக்கிறேன், மக்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்னுடன் உள்ளது, மக்களுக்காக நான் யார் காலில் வேண்டுமானாலும் விழுவேன், எனக்கு வாக்களித்தால் இத்தொகுதி மக்களாகிய உங்களுக்கு நல்லது, இல்லை என்றால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, நான் திரைப்படங்கள் இயக்கச் சென்று விடுவேன். தற்போது தேர்தல் என்பது வருமானம் தரும் தொழிலாக மாறிவிட்டது, இலவசங்கள் வேண்டாம் என்ற நிலை எப்போது உருவாகிறதோ அப்போதுதான் மக்களுக்கு உயர்வு வரும். சின்னங்களை பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்” என்று அவர் பேசினார்.