தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்!

Filed under: அரசியல்,சென்னை,தமிழகம் |

தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்!

பொங்கலாய், தமிழர் திருநாளாய், உழவர் பெருநாளாய், புத்தாண்டுப் பிறப்பாய் புதிது புதிதாய் வளர்ந்து வரும் தைத்திருநாளை கொண்டாடி மகிழும் எமது தமிழ் சொந்தங்களுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழறிஞர்களாலும், அண்ணா, ம.பொ.சி. ஆதித்தனார் போன்ற அரசியல் தலைவர்களாலும், தமிழர் திருநாள் என்று அழைக்கப்பட்ட பொங்கல் விழாவை, உலகெங்கும் நிறைந்திருக்கும் தமிழர்கள் இன்று கொண்டாடி வருகிறோம்.

உழவுத் தொழில் வேறு தொழில் செய்பவர்களுக்கெல்லாம் உணவளித்துத் தாங்குவதால், உழவர்கள் உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள். அப்படிப்பட்ட உழவர்கள் தங்கள் உழைப்பின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் நாள் பொங்கல் திருநாள்.
இந்துவாக, இசுலாமியராக, கிறித்தவர் என்ற வேறுபாடின்றி, ஒரே இனம்; அது தமிழினம் என்ற அடிப்படையில், தமிழர் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு இருக்கிறோம்.

ஆரியர் எதிர்ப்பு சங்க காலத்திலிருந்து தமிழ் இனத்தில் இருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், திருவள்ளுவர், திருமூலம், வள்ளலார் வழியில் நின்று, பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவா சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் வாழ்க்கைக்கு கிடைத்த நம்பிக்கைக்குரிய அரிய பொன் மொழியாகும். அதன்படி, தை வந்தால் நமக்கு ஒரு பொன்னான எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையோடு செயலாற்றுவோம்.

தமிழர் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும் இந்நேரத்தில், நம் இளையோர் ஒவ்வொருவரும் இன உரிமை அரசியல், சமூக சமத்துவம், உளவியல் அறம் மூன்றையும் முன்னெடுக்க உறுதி ஏற்க வேண்டும். இந்த இனிய நாளில் தமிழர்களின் வாழ்வுரிமை காக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் அரணாக நிற்கும்.
  
முக்கியமாக, தமிழ்த்தேசியச் சிந்தனைக் கூறுகளைச் சிதறிய அறிஞர் அயோத்திதாச பண்டிதர், இனம் – மொழி – நாடு குறித்த விடுதலைக் கருத்தியல் கருவூலங்களை அள்ளிக்கொடுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஆரியத்தின் வாயில் இருந்து தமிழ்மொழியை மீட்கத் தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழ்ச் சான்றோர்கள், கருத்துப் போரை, கருவிப் போராக மாற்றிக் களம் கண்ட தமிழ்த் தேசியப் போராளிகள் – தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் மற்றும் களமாடிய தோழர்கள் என்று ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ்த் தேசியக் களத்திலே நின்று தமிழினம் சமராடியது.
இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது தமிழர்தம் வரலாற்றுக் கடமை; தவிர்க்கவியலா வரலாற்று கடமை. இந்த வரலாற்றுப் போக்கின் விரைவு போக்கைக் கட்டியம் கூறும் நாளாக தமிழர்ப் புத்தாண்டு நாளாகிய தை முதல் நாள் அமையட்டும்.

வர்ண-சாதி ஒழிப்பு, தீண்டாமை முறியடிப்பு, பெண்ணுரிமை, சூழலியல் பாதுகாப்பு, அனைவர்க்கும் வேலை, வேலையில்லாக்கால வாழ்வூதியம், மெய்யான மதச்சார்பின்மை, வழிபாட்டுரிமை, தமிழே ஆட்சிமொழி-தமிழே பயிற்று மொழி-தமிழே தொடர்பு மொழி என்ற ஒரு மொழிக் கொள்கை, விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளைக் கற்க முழுவாய்ப்பு, அறிவியல் வளர்ச்சிக்கு முன்னுரிமை, பழந்தமிழர்களின் அறச்சிந்தனை-பெரியாரிய-அம்பேத்கரியக் கருத்தியல்கள் ஆகியவை ஒருங்கிணைந்த மண்ணுக்கேற்ற மார்க்சியத் தத்துவத்தை படைக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.

தைத் திருநாளை கொண்டாடி மகிழும் எமது தமிழ் சொந்தங்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மீண்டுமொருமுறை மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.