திண்டிவனம் ராமமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !

Filed under: அரசியல்,இந்தியா,சென்னை |

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி :

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன்.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து- அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள், மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தமிழ்நாட்டிற்குப் பெரும் பெருமை சேர்த்தவர். மறைந்த பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர். தமிழ்நாட்டு நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் பாடுபட்டுப் பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்த அவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். திரு.திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.