தேசத்தை மறு உருவாக்கம் செய்வது எப்படி? நீதி மற்றும் ஆட்சியாளர்களுடன் சத்குரு கலந்துரையாடல்

Filed under: இந்தியா,தமிழகம் |

நம் நாட்டில் வணிகம் சார்ந்த  கொள்கைகளை வடிவமைப்பதன் மூலம்  அடுத்த 3-5 ஆண்டுகளில் பெரிய முதலீடுகளை நமது நாட்டை நோக்கி ஈர்ப்பதற்கான  வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.

வருமான வரித் துறையின் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) ஏற்பாடு செய்த ‘தேசத்தை மறு உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இணையதள கலந்துரையாடலில் (வெபினாரில்) அவர் இவ்வாறு கூறினார்.

அந்தக் குழு உறுப்பினர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியுமான தீபக் மிஸ்ரா, உலகம் முழுவதும் அமலாகியுள்ள ஊரடங்கிற்கு பிந்தைய நாட்களில், நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதிலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் பங்கேற்க வேண்டும் என்பைதை அடிகோடிட்டுக் காட்டினார்.

குடிமக்கள், சட்டத்தை கூடுதலாக மதிப்பதற்கு நாட்டை ஒழுங்கமைக்கும் நிறுவனங்கள் எவ்வாறு பங்காற்ற வேண்டும் என்பது குறித்து சத்குரு பேசினார். தேசத்துக்காக அல்ல, ஒரு சமூகமாக நமது சொந்த நலனுக்காக இதைச் செய்கிறோம் என்பதை குடிமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நாம் தன்முனைப்புடன் வெற்றிபெற விரும்பினால், தேசத்தில் ஒரு வலுவான கட்டமைப்பு மற்றும்  நிலையான அடித்தளம் இருக்க வேண்டும். “தேசம், ஒரு நிலையான மற்றும் சீரானதாக இருப்பதை உறுதிப்படுத்தாமல், உங்களால் அதிக முன்னேற்றம் காண  முடியாது.” என்று அவர் கூறினார், ஒருவர் “அறிவுஜீவி, ஓவியர், கவிஞர் அல்லது யோகி என யாராக இருந்தாலும், நாட்டிற்காக பங்களிக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. ஏனெனில், இந்த நாடுதான் அவர்களுக்கு அந்த தளத்தை உருவாக்கித் தந்துள்ளது  என்றும் அவர் கூறினார்.

உள்நோக்கிய வளர்ச்சியில் நம்மை எவ்வாறு கட்டமைத்துக் கொள்வது  என்ற வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (ITAT) தலைவர் பி.பி. பட் அவர்களின் கேள்விக்கு பதிலளித்த சத்குரு, “எப்போதுமே, இந்த கலாச்சாரத்தில் நல்வாழ்வு” என்பது மேற்கு நாடுகளிலிருந்து மாறுபட்டு வரையறுக்கப்பட்டுள்ளது. மேற்கு நாடுகளில் அது பெரும்பாலும் பொருளாதார செழிப்பைக் குறிக்கும் வகையில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது என்று சத்குரு கூறினார். பொருளாதாரம் முக்கியமானது மற்றும் அவசியமானது என்றாலும், இந்த கலாச்சாரத்தில் நல்வாழ்வு என்பது “சத்தான உணவு, சுத்தமான காற்று, குடிக்க தூய்மையான நீர், வளமான மண், அமைதியான மற்றும் மகிழ்ச்சியான மனம்” ஆகியவற்றையே குறிக்கும் என்றார் சத்குரு. மேலும் செல்வம் என்பது நல்வாழ்வுக்கு அவசியமில்லை என்று கூறிய அவர், பொருளாதார வளர்ச்சியில் “இந்தியா மேற்கத்திய மாதிரியை மீண்டும் கடைபிடிக்கத் தேவையில்லை” என்று கூறினார்.

வரி செலுத்துவோருக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நம்பிக்கையின்மையை எவ்வாறு சரிசெய்ய முடியும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பி.சி. மோடி சத்குருவிடம் கேட்டார். அதற்கு,  “இது சவாலான ஒன்றுதான். ஏனெனில் வரிவிதிப்புக்குரிய வருமானம் உள்ள மக்கள், நமது மக்கள் தொகையில் ஏறக்குறைய 2 சதவீதத்தினர்தான். வருமான வரி செலுத்துகிறார்கள். “மக்கள்தொகையில் 2%  மக்களே வருமான வரி செலுத்துகையில், தங்கள் பணம் சேவை வடிவத்தில் திரும்பி வரவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்,” என்று அவர் கூறினார், ஏனென்றால், மற்ற 98% மக்களுக்கும் கூட 2% மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியில்தான்  சேவை செய்ய வேண்டும்.

அனைத்து குடிமக்களுக்கும் திறமையான சேவைகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும் வகையில், பொருளாதாரத்தில் பெரிய முதலீகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் பரிந்துரைத்தார். வரி ஏய்ப்பு செய்பவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். இது பிரிட்டிஷ் சகாப்தத்திலிருந்து எஞ்சியிருக்கும் ஒரு பாரம்பரியமாகும். இந்த குற்றத் தன்மை  சமூகத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக தற்போது உள்ளது. மேலும் கூடுதலான இணக்கமின்மை மற்றும் நம்பிக்கையின்மை என்ற சுழற்சி இதன் விளைவாக நிலைநிறுத்தப்படுகிறது.

கோவிட் நெருக்கடியுடன் இந்தியா எவ்வாறு முன்னேறுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சத்குரு, ”நம் மக்கள்தொகையின் அடர்த்தியையும் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு பார்த்தால், நாம் மிகச் சிறப்பாக செயலாற்றியுள்ளோம் என்றே கூறவேண்டும். செப்டம்பர் நடுப்பகுதியில் இந்தியா இந்த ஊரடங்கிலிருந்து/முடக்கத்திலிருந்து வெளியே வருமானால், “6-9 மாதங்களில்” நமக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் நியாயமான முறையில் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது என்பதை ஒரு எச்சரிக்கை உணர்வுடன் கூடிய தனது மதிப்பீடாக அவர் எடுத்துரைத்தார்.

பிசி மோடி, தலைவர், மத்திய நேரடி வரி வாரியத்தின் (சிபிடிடி) தலைவர்; ஜி.எஸ்.பன்னு, துணைத் தலைவர், ஐ.டி.ஏ.டி; டாக்டர் அலோக் ஸ்ரீவாஸ்தவா, ஆட்சி உறுப்பினர் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்.சி.எல்.ஏ.டி); இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (ஐ.சி.ஏ.ஐ) தலைவர் அதுல் குப்தா; நிகிதா பதேகா தலைவர் அகில இந்திய வரி பயிற்சியாளர்களின் கூட்டமைப்பு (AIFTPA); அகில இந்திய பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அக்ரவாலா ஆகியோர் வெபினாரில் பங்கேற்ற முக்கியமானவர்களில் சிலர். ITAT இன் உறுப்பினர் பிரசாந்த் மகரிஷி அமர்வை ஒருங்கிணைத்தார்.

கடந்த 70 நாட்களாக நாடு முழுவதும் அமலாகியுள்ள ஊரடங்கிற்கு பிந்தைய நாட்களில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லதில், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆட்சியாளர்கள் மற்றும் நீதித்துறையின் பங்கு குறித்து குழுவினர் விரிவாக கலந்தாலோசனை நடத்தினர்.

90 நிமிடங்கள் நீடித்த இந்த அமர்வு, இந்திய வரைபடத்தை பாதுகாப்பான முதலீட்டுக்கான இடமாக உருவாக்குவதில் நீதித்துறை, கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு அமைப்புகளின்/நிறுவனங்களின்/அலுவலகங்களின் பங்கையும் ஆய்வு செய்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, சத்குரு தொழில்துறை அமைப்புகள், வணிக நிறுவனங்களின் தலைவர்கள், மருத்துவ வல்லுநர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிரபலங்கள் வரை பல குழுக்களுடன் உரையாடி வருகின்றார். இந்த அமர்வில் பல தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றாலும், நோய்தொற்றின் பிந்தைய நிலைமைகளில் தேசத்தை மீட்டெடுப்பதை மையமாகக் கொண்டுதான் விவாதங்கள், கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.