நடிகர் பிரதீப் விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டார். இவர் தெகிடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
“சொன்னா புரியாது” படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு மிர்ச்சி சிவா நடித்த அறிமுகமானவர் நடிகர் பிரதீப் கே விஜயன். “தெகிடி,” “மேயாத மான்,” “லிஃப்ட்,” “இரும்புத் திரை,” “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,” “என்னோடு விளையாடு,” “ஒரு நாள் கூத்து,” “மீசையை முறுக்கு,” “நெஞ்சில் துணிவிருந்தால்” உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பிரதீப் விஜயன் கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்த “ருத்ரன்” படத்தில் நடித்தார். மேலும் திரைப்படங்களுக்கு சப்டைட்டில் போடும் பணிகளையும் அவர் செய்து வந்தார். சென்னை பாலவாக்கத்தில் தனியாக அறை எடுத்து வசித்து வந்துள்ளார். கடந்த இரு நாட்களாக பிரதிபுக்கு அவரது நண்பர்கள் தொலைபேசியில் அழைக்க முயற்சித்தனர். ஆனால் பிரதீப் பதிலளிக்காததால் அவர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். கதவு உள்பக்கம் பூட்டியிருந்ததாலும் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வந்ததால் உடனே காவல் துறைக்கு தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குளியறையில் இறந்த நிலையில் பிரதீப் விஜயன் கிடந்துள்ளார். அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரதீப்பின் உடல் தற்போது சென்னை ராயபேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இறந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து பிரதீப் விஜயன் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.