நடுக்கடலில் கொலை வெறி தாக்குதல்!

Filed under: உலகம்,தமிழகம் |

இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்கியதோடு மீன்பிடி வலைகளை அறுத்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படையால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. ராமேஸ்வரத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.