பைக்குகளை திருடி உதவியவர் கைது!

Filed under: இந்தியா |

நண்பனின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு சிகிச்சையளிக்க பைக்கைகளை திருடி உதவி செய்து வந்த திருடனை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரில் பழ வியாபாரம் செய்து வந்த அசோக், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார். இதனால் அசோக் அடிக்கடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார். திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அசோக்கின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. பெங்களூரு கிரி நகரில் ஐடி ஊழியர் ஒருவரின் பைக் திருடியதாக அசோக்கும், அவரது கூட்டாளி சதீசும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அப்போது அசோக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது நண்பரின் மனைவி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், பைக்கை திருடி விற்ற பணத்தை முழுவதும் அவரின் சிகிச்சைக்காக கொடுத்துவிட்டேன் எனவும் தெரிவித்தார். மேலும் எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்ற போது, அந்த நண்பர் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும், அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த உதவியை செய்ததாகவும் அசோக் தெரிவித்தார். அசோக்கின் இந்த வாக்குமூலம் போலீசாருக்கு வியப்பையும், ஆச்சரியத்தையும் தந்தாலும், பைக்கைகளை திருடிய குற்றத்திற்காக அசோக் மீது நடவடிக்கை மேற்கொண்டனர்.