28 ஆண்டுகள் கழித்து கொலையாளி கைது!

Filed under: இந்தியா,சென்னை |

28 ஆண்டுகள் கழித்து மாமியாரை கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 1993ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோஷி என்பவர் சென்னைக்கு வேலை விஷயமாக வந்த இடத்தில் இந்திரா என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் 1994ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. ஜோஷியின் மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றபோது ஜோஷி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஜோஷி தனது மனைவியை கத்தியால் தாக்க வரும்போது அவருடைய அம்மா தடுத்ததால் அவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஜோஷி அங்கிருந்து தப்பி தனது சொந்த மாநிலத்திற்கே சென்று தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து 26 ஆண்டுகளாக ஜோஷியை தேடி வந்த போலீசார் தற்போது அவரை கண்டுபிடித்துள்ளனர். ஆள் அடையாளமே தெரியாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஜோஷியை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை, உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.