மேயரை நக்கல் செய்த ஜெயக்குமார்!

Filed under: அரசியல்,தமிழகம் |

மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தத்தை அளிப்பதாக ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்படியாக முதலமைச்சர் பயணம் செய்த காரில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆபத்தான முறையில் வெளியே தொங்கியபடி பயணம் செய்தார். இந்த வீடியோ இணையதளங்களில் கிண்டலான முறையில் வைரலானது. அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரின் காரில் சென்னை மேயர் பிரியா தொங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படும் சம்பவம் பற்றிய விளக்கத்தில், “மேயர் பிரியா தொங்கிக் கொண்டு வந்தது முதலமைச்சரின் கார் அல்ல. பாதுகாப்புக்கு வந்த கார். ஒரு அசாதாரண சூழலில் உடனடியா அவ்விடம் நோக்கி விரைய மேயர் பிரியா அவ்வாறு செய்துள்ளார். ஒரு பெண்மணி இவ்வளவு விரைவாக ஆணுக்கு நிகராக இப்படி துணிச்சலோடு செய்கின்ற பணிகளை பாராட்டலாமே தவிர விமர்சிப்பது தேவையற்ற ஒன்று” என கூறியுள்ளார்.

இது குறித்து அதிமுக ஜெயகுமார், “சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தமளிக்கிறது. முதலமைச்சர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார். முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் தொங்கல் மேயராக உள்ளார். மேயரின் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட அம்மா ஆண்ட இந்த மண்ணில் இப்படி ஒரு இழுக்கு ஏற்பட்டுள்ளது” என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.