லிப்ட் அறுந்ததில் 8 பேர் பலி!

Filed under: இந்தியா |

லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி பெரும் சோகத்தில் உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆஸ்பயர்- 2 என்கிற அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனியாருக்கு சொந்தமான இக்கட்டடத்தில் இன்று வழக்கம் போல் பணியாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது திடீரென அந்த உயரடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்த லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதில் 8 தொழிலாளர்கள் சம்ப இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் லிப்ட் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்த 8 கூலித்தொழிலாளர்களும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்து நடந்த உடனேயே காவல்துறைக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்றும், தாமதமாக தெரிவிக்க காரணம் என்ன என்றும் கட்டடத்தில் வேலை செய்த ஊழியர்களின் உறவினர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இறந்த 8 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.