ஹர்பஜன் சுழலில் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்!

Filed under: விளையாட்டு |

image_20130528172610

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இதில் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுமித் மற்றும் தெண்டுல்கர் களம் இறங்கினர்.

இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தெண்டுல்கர் 15 ரன்கள் எடுத்த நிலையில் வாட்சன் பந்தில் அவுட் ஆனார். சுமித்துடன் ஜோடி சேர ராயுடு களம் இறங்கினார்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சுமித், 5 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடித்து 44 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். ராயுடு 29 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய பொல்லார்டு 15 ரன்னில் அவுட் ஆனார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்மா 14 பந்தில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருடன் இணைந்து விளையாடிய மேக்ஸ்வெல் 14 பந்தில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர்கள் இருவரும் அணியில் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிக பட்சமாக டம்பி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக பெரேரா மற்றும் ரஹனே களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலே பெரேரா 8 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

அடுத்து களம் இறங்கிய சாம்சன், ரஹனேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க ஆரம்பித்தன. இருவரும் அரைசதம் கடந்த நிலையில் சாம்சன் 60 ரன்களிலும் ரஹனே 65 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து களம் இறங்கிய ஆட்டக்காரர்கள் வாட்சன் 8, பின்னி 10, கூப்பர் 4, டிராவிட் 1, யாக்னிக் 6, சுக்லா 0, டம்பி 0 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.

மும்பை தரப்பில் ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகள், பொல்லார்டு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.