வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரமடைந்த காதலி, காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம் சித்தவுனி கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் பிந்த் அதே ஊரைச் சேர்ந்த லட்சுமி என்ற இளம்பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். ஆனால், ராகேஷுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது, மண்டபத்துக்கு வந்த லட்சுமி, தான் கொண்டு வந்திருந்த பிளாஷ்டிக் பையை ராகேஷ் முகத்தில் வீசினார். அதில் இருந்த கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட், முகத்தில் விழுந்து ராகேஷ் அலறித் துடித்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், லட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தன்னுடன் நெருங்கிப் பழகி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருந்ததால் அவர் மீது ஆசிட் வீசியதாக போலீசாரிடம் லட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.