பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் காலமானார்!

Filed under: இந்தியா,சினிமா |

பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் இன்று காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

தந்தையுடன் ரிஷி கபூர்

புதன்கிழமை இரவு மும்பையின் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர், வயது 67 இன்று காலை காலமானார். இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர், தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார், தேசிய விருதும் பெற்றார். அதை தொடர்ந்து பாபி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மனைவி நீது கபூர் மற்றும் குழந்தைகள் ரித்திமா கபூர் சாஹ்னி மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் உள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ரிஷி கபூர், கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று நடிகர் இர்பான் கான் மரணமடைந்த துயரத்தில் இருந்து மீளாத பாலிவுட் பிரபலங்களுக்கு ரிஷி கபூரின் மறைவு மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது.