சிகிச்சைக்காக வந்த நபரை 10 அடி தூரத்தில் வைத்து பரிசோதனை நடத்திய மருத்துவர் – கொரோனாவின் அச்சமா?

Filed under: தமிழகம் |

விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொண்டைவலி பிரச்சினைக்காக சிகிச்சை பெற வந்த நபரை 10 அடி தூரத்தில் வைத்து மருத்துவர் பரிசோதனை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டைவலி மற்றும் சளி பிரச்சினைக்காக இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அந்த சமயத்தில் வேலையில் இருந்த மருத்துவர் பிரகாஷ் அந்த இளைஞரை 10 அடி தூரத்தில் வைத்து டார்ச் லைட் அடித்து பரிசோதனை செய்தார் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது வீடியோ பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

மேலும், அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான பாதுகாப்பு கவசங்கள் கொடுக்காததால் இளைஞரை தூரத்தில் வைத்து மருத்துவர் பரிசோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.