திருச்சி என்.ஐ.டி.யில் சூரிய ஒளியில் இயங்கும் மின்சாதனங்கள் கண்டுபிடிப்பு

Filed under: தமிழகம் |

திருச்சி என்.ஐ.டி.யில் சூரிய ஒளியில் இயங்கும் மின்சாதனங்கள் கண்டுபிடிப்பு.

திருச்சி என்.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சி.டி.ஏ.சி. ஆராய்ச்சியாளர்கள் இணைந்த குழுவினர் எளிமையான, சிக்கனமான, கையடக்கமான, திறன் வாய்ந்த சூரிய ஒளியில் இயங்கக்கூடிய மின் சாதனங்களை உருவாக்கியுள்ளது.

இதில் சமூகத்தின் தற்போதைய தினசரி தேவைகளான சூரிய ஒளியில் இயங்கக்கூடிய கையடக்க மொபைல் சார்ஜர் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சோலார் பேனல்களுடைய தெருவிளக்குகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், என்.ஐ.டி. தொழில்நுட்ப கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறையின் பேராசிரியர் நாகமணியின் மேற்பார்வையில், சி.டி.ஏ.சி.யின் மூத்த இயக்குனர் சந்திரசேகர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். இதில் 2 சாதனங்கள் உருவாக்கப்பட்டு, உபயோகத்துக்கு தயாராக உள்ளன. இந்த ஆராய்ச்சியில் கலியம்-நைட்ரைடு அடிப்படையிலான ஆற்றல் மாற்றிகளை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

இந்த உள்நாட்டு ஆராய்ச்சி குறிப்பிடத்தக்க சமூக நன்மைகளை கொண்டுள்ளது. செல்போன் சார்ஜிங், ஒருங்கிணைக்கப்பட்ட சோலார் பேனல்களுடைய தெருவிளக்குகள், கழிவுநீர் கண்காணிப்பு அமைப்புகளுக்கான பயனுள்ள ஆற்றல் சேமிப்பு உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை இந்த ஆராய்ச்சி பயன்படுத்துகிறது. மேலும், திருச்சி என்.ஐ.டி.யின் இயக்குனர் அகிலா நிறுவனத்தின் ஆராய்ச்சி திறன்கள், தொழில்துறையின் தேவைகளை உணர்ந்து, பங்காற்றுவது குறித்தும் பாராட்டினார். இதன்மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி என்.ஐ.டி. நிறுவனம் இந்திய தேசத்தை சுதந்திரமாகவும், தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் ஆத்ம நிர்பார் அபியான் திட்டத்தை முறையாக செயல்படுத்தி செல்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.