அரசு அலுவலர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை: தமிழக அரசு அறிவிப்பு!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை,மே 15 

தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு -3 காலகட்டத்தில் 33% பணியாளர்களைக் கொண்டு அரசுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காகவும் பொதுப் போக்குவரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சனிக்கிழமைகளிலும் அரசுப் பணிகள் மேற்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்தி 18.05.2020 அன்றிலிருந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவித்து அரசு முடிவெடுத்துள்ளது.

மேலும் 18.05.2020 அன்றிலிருந்து தொகுதி-‘அ’ (Group-A) அலுவலர்கள் மற்றும் அந்த ஊதிய விகிதம் பெறும் அரசுப் பணியாளர்கள் அனைவரும் மற்றும் அனைத்து அலுவலகத் தலைவர்களும் (Head of Offices) பணி நாட்களான ஆறு நாட்களிலும் அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும். மற்ற அலுவலர்களை பொறுத்த வரை 50% பணியாளர்களைக் கொண்டு சுழற்சி முறையில் அரசுப் பணிகளை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. நோய்கட்டுப்பாட்டு பகுதியில் (Containment Zone) உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. சுழற்சி முறையில் அலுவலக பணியில் இல்லாத நாட்களில், அலுவலகப் பணித்தொடர்பாக, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் எந்தவொரு மின்னணு முறையிலும் தொடர்பில் இருக்க வேண்டும்.
இந்த முறையினை தலைமை செயலகம் முதல் அரசின் வாரியங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டம் / கள அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு துறைகள் அனைத்தும் பின்பற்றுதல் வேண்டும்.

உரிய பேருந்து வசதிகள் செய்து தரப்படும். அரசுப் பணியாளர்கள் அனைவரும் இந்த பணி முறையினை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. காவல், சுகாதாரம், மாவட்ட நிருவாகம், கருவூலம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற துறைகளை பொறுத்த வரையில் அரசாணை நிலை எண். 172, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 25.03.2020ன் படி வெளிடப்பட்டுள்ள ஆணைகள் பின்பற்றப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.