சுங்கச்சாவடியை புல்டோசரால் இடித்து தள்ளிய டிரைவர்!

Filed under: இந்தியா |

புல்டோசர் கொண்டு சுங்கச்சாவடியையே டிரைவர் இடித்து தள்ளியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முந்தைய காலங்களில் ஏதேனும் பரபரப்பான குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை தண்டிக்கும் விதமாக அவர்களது வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. அதுபோல தற்போது ஒரு சுங்கச்சாவடியையே ஒரு நபர் புல்டோசர் கொண்டு இடித்துள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம் ஹாபூர் பகுதியில் சிஜார்சி சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. அந்த டோல்கேட் வழியாக புல்டோசர் ஒன்று சென்றுள்ளது. அதற்கு சுங்க கட்டணம் கட்டும்படி சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியதற்கு அந்த புல்டோசர் டிரைவர் கட்டணம் செலுத்து மறுத்துள்ளார். கட்டணம் செலுத்தாவிட்டால் சுங்கச்சாவடியை கடந்து போக முடியாது என ஊழியர்களும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் அங்கேயே தனது புல்டோசரை இயக்கி டோல் ப்ளாசாவை அடித்து உடைக்க தொடங்கியுள்ளார். இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்த நிலையில் தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். புல்டோசரும், டிரைவரும் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.