பலியான முபின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு!

Filed under: தமிழகம் |

கோவை மாநகரில் கார் வெடித்த சம்பவத்தில் சதி முயற்சி செய்ததாக இறந்த முபின் உடலை அடக்கம் செய்வதற்கு அனைத்து ஜமாத்துகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார். இந்த விபத்து குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு நேரடியாக சென்று விசாரணையை மேற்கொண்டார். இந்த வழக்கில் வெளியாகியுள்ள பல தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. உயிரிழந்த முபினின் வீட்டருகே உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் முபினும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து சில பொருட்களை காரில் ஏற்றும் காட்சிகள் கிடைத்துள்ளது. அதை கொண்டு போலீசார் மற்ற நபர்களை தேடி வந்தனர். இவ்வழக்கில் தற்போது முபின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் காரில் எடுத்து சென்ற மர்ம பொருள் என்ன? இன்னும் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது பற்றி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் விபத்தில் பலியான உடலை அடக்க செய்ய அனைத்து ஜமாத்துகளும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அதாவதும், முபின் சதி முயற்சி உடந்தையாக செயல்பட்டதாக கருதி, அமைதியை விரும்புவதாலும், சமூக விரோத செயலுக்கு துணை போகாமல் இருப்பதற்காகவும் வேண்டி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மனிதாபிமான அடிப்படையில் பூமார்க்கெட்டில் ஜமாத்தில் முபீனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.