ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

Filed under: சென்னை,தமிழகம் |

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையம் ஜெயலலிதா இறப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்” என்று முதல்வர் தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு.