மேட்டூர் அணை மே 24ம் தேதி திறப்பு

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் மே 24ம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அறிக்கையில் கூறியதாவது:& தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டுர் அணைக்கு அதிக நிர்வரத்து உள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும், நீர் இருப்பு 86.25 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12க்கு முன்பாகவே, வரும் 24ம் தேதி முதல் நீரைத் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.