விலையில்லா வண்டல் மண்: பொதுப்பணித்துறை அறிவிப்பு

Filed under: தமிழகம் |

சென்னை,மே 6 

ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டம் செய்பவர்கள் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என பொதுப் பணித்துறை அறிவிப்பு.

தமிழ்நாட்டில் உள்ளஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்ற நீர் கட்டமைப்புகளை மக்கள் பங்களிப்புடன் தூர்வாரி அவற்றின் கொள்ளளவினை மீட்டெடுக்க முதலமைச்சர் அவர்களால் ‘குடிமராமத்து திட்டம்’ 2017-ல் தொடங்கப்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் ஆதாரங்களில், பருவ மழையின்போது வழக்கத்தை விட நீர் அதிகம் தேக்கப்பட்டு விவசாயத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

மேலும், இந்த நீர் நிலைகளில்உள்ளகளிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டம் செய்பவர்களுக்கு வழங்கும் பொருட்டு முதல்வரின் ஆணையின் படி அரசாணை எண்.50, தொழில்துறை, நாள் 27.04.2017 அன்று வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், இதுவரை 6,69,900 விவசாயிகளும், மட்பாண்ட தொழில் புரிவோரும் பயன் பெற்றுள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கிலிருந்து விவசாய பணிகளுக்கு ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இக்கோடை காலத்தில் பாசனத்திற்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பதால், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விலையில்லாமல் தங்கள் கிராமத்திலோ அல்லது அருகாமை கிராமத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிபெற்றுஎடுத்துக் கொள்ளலாம்.