செல்போன் டவரை எடைக்குப் போட்ட வீட்டு உரிமையாளர்கள்!

Filed under: சென்னை |

சென்னையில் மூவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் தனியார் டெலிகாம் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. வாடகை பாக்கியால் செல்போன் டவரை எடைக்கு போட்டு காசாக்கியுள்ளனர் வீட்டின் உரிமையாளர்கள்.

சென்னை கோயம்பேடு வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர்கள் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன். இவர்கள் மூவருக்கும் சொந்தமான பில்டிங்கின் மாடியில் தனியார் டெலிகாம் நிறுவனத்தின் சார்பில் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கென மாதம்தோறும் ரூ.40 ஆயிரம் வாடகை கொடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு டெலிகாம் நிறுவனம் மூடப்பட்டதால், அந்த செல்போன் டவர் செயல்படாமல் இருந்து வந்தது. டெலிகாம் நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில், இவர்களின் வீட்டின் மாடியில் சென்று செல்போன் டவரை பார்க்க சென்றுள்ளார். ஆனால், அங்கு டெலிபோன் டவர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசில் புகாரளித்தார். கடந்த 6 ஆண்டுகளாக வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகை தராததாலும், அது துருப்பிடித்திருந்ததாலும், அவற்றைப் பிரித்து, வீட்டின் உரிமையாளர்கள் பழைய இரும்புக் கடையில் எடைக்குப் போட்டதாக தெரிகிறது. 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி என்பது, அந்த செல்போன் டவரின் விலையான ரூ.8 லட்சத்தை விடவும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர்.