தசாவதாரம் 2ம் பாகமா?

Filed under: சினிமா |

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம் 2ம் பாகத்தை பற்றிய தகவலை கூறியுள்ளார்.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் “தசாவதாரம்.” இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்ததகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கூகுள் குட்டப்பா.” இத்திரைப்படத்தில் தர்ஷன்,- லாஸ்லியா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. சென்னை திருப்போரிலுள்ள எஸ்.எஸ்.என்.கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் “கூகுள் குட்டப்பா” பட குழுவினருடம் கே.எஸ்.ரவிக்குமார் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், “சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் போனில் பேசும் போது, தசாவதாரம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆச்சா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். சில ஆண்டுகளாகவே என்னைப் பார்ப்பவர்கள் தசாவதாரம்- 2ம் பாகம் எப்போது எனக் கேட்கிறார்கள். ஆனால் எங்கள் இருவராலும் எத்தனை கோடி கொடுத்தாலும் இனி தசாவதாரம் 2 படத்தை உருவாக்க முடியாது. அதனால் தசாவதாரம் 2 படத்திற்கு வாய்ப்பில்லை. “கூகுள் குட்டப்பா”வை தியேட்டர்களுக்குச் சென்று பாருங்கள். அப்படி பார்க்க இயலாதவர்கள், ஓடிடி தளத்தில் பாருங்கள்” என கூறினார்.