திமுக – காங்., அதிமுக – தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்… என்ன நடக்கிறது?

Filed under: அரசியல் |

திமுக – காங்., அதிமுக – தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்… என்ன நடக்கிறது?

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலை நீடிக்கிறது. அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன.

பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், 20 தொகுதிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக நேற்றிரவு 11.45 மணிக்கு அறிவித்தது. இடைதேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், தாங்கள் கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே ஒப்பந்ததத்தில் கையெழுத்து என்று கூறியுள்ளது, தேமுதிக. 


இதுகுறித்து தேமுதிக துணைச் செயலாளர் பார்த்த சாரதி கூறுகையில், ‘முதலில் அதிமுகவிடம் 41 தொகுதிகள் கேட்டோம். தற்போது 25 தொகுதிகள் வரை கேட்டுள்ளோம்’ எனத் தெரிவித்தார். அதிமுக உடனான தொகுதி உடன்பாடு விரைவில் வெளியாகும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி ஆகியவைகளின் நிர்வாகிகளும் நேற்று அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை சந்தித்து பேசினர்.

திமுகவை பொறுத்தவரையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விசிக, ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி நேற்று திமுக ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், ‘எண்ணிக்கை முக்கியமா? லட்சியம் முக்கியமா என்று கேட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு லட்சியமே முக்கியம்’ எனத் தெரிவித்தார். திமுக உடனான தொகுதி ஒப்பந்தம் ஏறத்தாழ இன்று இறுதியாகி விடும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த இன்று வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது திமுக. இதனிடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை என மதிமுக கூறியுள்ளது.