துறைமுக பணிக்குழுக்கள் மாற்றம்: மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் ஆலோசனை

Filed under: இந்தியா |

புது டெல்லி, ஏப்ரல் 28

மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மன்சுக் மாண்டவியா இந்தியத் துறைமுகங்களில் பணிக்குழுக்களை மாற்றுவது குறித்து பயணிகள் கப்பல்களை இயக்குபவர்கள், கப்பல் நிறுவனங்கள், கடற்பயண கூட்டமைப்புகள், மாலுமிகளின் சங்கங்கள் ஆகியவற்றுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.

சர்வதேசக் கடற்பரப்பில் வேலை செய்கின்ற மற்றும் சிக்கித் தவிக்கின்ற இந்திய மாலுமிகளின் சூழ்நிலையைக் கண்காணிப்பது குறித்தும் அவர் கலந்துரையாடினார். வரும் காலத்தில் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு ஏதுவாக தற்போது வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் குறித்த விவரங்களை வழங்குமாறு மாண்டவியா கேட்டுக்கொண்டார்.  சூழ்நிலை சாதகமாக உருவாகும் இடங்களில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகளை விரைவாக அங்கிருந்து அழைத்து வருவோம் என்று பல்வேறு மாலுமிகளின் கூட்டமைப்புக்கு மாண்டவியா உறுதி அளித்துள்ளார்.

வர்த்தகப் பொருள்களின் தடையில்லா விநியோகச் சங்கிலித் தொடர் பயணத்தில் மாலுமிகளின் முக்கியத்துவத்தை மாண்டவியா அங்கீகரித்தார். மாலுமிகள் எதிர்கொள்ளும் சவால்களை அங்கீகரித்ததோடு இந்த நெருக்கடியான மற்றும் சோதனையான காலகட்டத்தில் அவர்களின் பணிகளையும் பாராட்டினார்.

இந்தியத் துறைமுகங்களில் மாலுமிகள் கப்பலை இயக்குவதற்கும் நிறுத்துவதற்குமான செயல்முறைகளை எளிமைப்படுத்துமாறு கப்பல்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு (INSA), தேசிய அளவிலான ஷிப்பிங் ஏஜென்சிகளின் கடல்சார் கூட்டமைப்பு – இந்தியா (MANSA), இந்திய மாலுமிகளின் தேசிய யூனியன் (NUSI), இந்தியன் மாரிடைம் ஃபவுண்டேஷன்  (IMF), மாரிடைம் யூனியன்  ஆஃப் இந்தியா (MUI), கப்பல் உரிமையாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும் ஏஜெண்டுகளின் கடல்சார் கூட்டமைப்பு (MASSA) முதலானவற்றின் பிரதிநிதிகள் இந்தக் காணொளிக் காட்சியில் கலந்து கொண்டனர்.