மம்தாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடைத்தேர்தல்!

Filed under: இந்தியா |

கொல்கத்தா, செப் 30:
மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

பின் முதலமைச்சராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜிக்கு, 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்வாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்.எல்.ஏ.வும், மாநில அமைச்சருமான சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுவது உறுதியானது. இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவானிபூர் தொகுதியில் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. வாக்குச்சாவடிகளில், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து, ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. பவானிபூர் தவிர, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இடங்களிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3ம் தேதி நடக்க உள்ளது.