9 மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள்: தமிழக அரசு உத்தரவு

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, அக் 4:
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கு, சென்னையில் இருந்து, 5, 8ம் தேதிகளில் கூடுதல் பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது.

இதற்கான வாக்குப்பதிவு வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்னையில் அதிக அளவில் வசிக்கின்றனர்.

அவர்களும் தேர்தலின்போது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு முன்வந்துள்ளது.

இதையொட்டி, நாளையும் (5ம் தேதி), 8ம் தேதியும் (வெள்ளிக்கிழமை) 9 மாவட்டங்களுக்கு, சென்னையில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.