கேஷவ் தேசிராஜு மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

ஒன்றிய நல்வாழ்வுத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரனுமான கேஷவ் தேசிராஜு இன்று காலை மாரடைப்பால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

அரசுப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறை கொண்டிருந்த மனிதநேயப் பண்பாளராகவும் அவர் திகழ்ந்தார்.

தமது பாட்டனாரின் பிறந்தநாளிலேயே மறைவெய்தியுள்ள அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.