சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அரசாங்கங்கள் அதிக முக்கியம் அளிக்க வேண்டும் ஐ.நா நிர்வாகியுடனான கலந்துரையாடலில் சத்குரு வேண்டுகோள் !

உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச அளவில். ஜூன் 17-ம் தேதி பாலைவனமாதலை எதிர்த்து போரிடும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளையானது, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்துடன் (International Union for Conservation of Nature – IUCN) இணைந்து இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நேற்று (ஜூன் 17) ஏற்பாடு செய்தது.

’பாலைவனமாதலை தடுப்பதற்கான இயற்கை சார்ந்த தீர்வுகள்’ என்ற தலைப்பில் நடந்த இந்த கலந்துரையாடலில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, IUCN அமைப்பின் இந்திய பிரதிநிதி டாக்டர்.விவேக் சக்‌சேனா, ஐ.நா.,வின் பாலைவனமாதலை எதிர்த்து போரிடும் அமைப்பின் (UNCCD) துணை செயலாளர் டாக்டர்.பிரதீப் மோங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலகளவில் உணவு பாதுகாப்பு, வாழ்விடம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாலைவனமாதலை தடுக்க எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இதில் சத்குரு பேசியதாவது:

இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில் 52 சதவீதம் உயிர்சத்துக்கள் இல்லாமல் வளம் இழந்த நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டில் மண்ணை வளமாக வைத்துக் கொள்ள ஒரே வழி குறைந்தப்பட்சம் 40 சதவீதம் மண்பரப்பு, நிழலில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அந்த வகையில், காவேரி வடிநிலப் பகுதிகளில் தனியார் விவசாய நிலங்களில் 242 கோடி மரங்கள் நடுவதன் மூலம், வடிநிலப் பரப்பில், மூன்றில் ஒரு பங்கை நிழலுக்கு மாற்றும் நோக்கத்துடன் காவேரி கூக்குரல் இயக்கம் செயலாற்றி வருகிறது.

பண மதிப்பு மிக்க மரங்கள் நடுவதால் விவசாயிகளின் வருவாய் படிப்படியாக 300 முதல் 800 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்துக்கு மாற உதவும் விதமாக நம் உணவில் 25 முதல் 30 சதவீதம் மரங்களின் விளைபொருட்களில்  இருந்து பெறுவதாக இருக்க  வேண்டும்.

உலகளவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியம் அளிக்க வேண்டும். அதற்கு எல்லா நாடுகளில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மற்றும் அந்நாட்டு குடிமக்கள் ஒருமித்த குரலில் சுற்றுச்சூழல் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் அவசியம் இடம்பெற வேண்டும்.

இவ்வாறு சத்குரு பேசினார்.