ட்ரம்ப்புக்கு எதிராக பிரச்சாரத்தில் இறங்கும் ஒபாமா!

Filed under: உலகம் |

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ட்ரம்ப்புக்கு எதிராக முன்னாள் அதிபர் ஒபாமா பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக அமெரிக்கா கொரோனாவால் அதிகமான பாதிப்புகளை சந்துத்துள்ளது, சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்கி அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர், பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகளை காட்டிலும் சீனா மீது பழி சுமத்துவதிலேயே குறியாக இருப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா குறித்து பேசியுள்ள முன்னாள் அமெரிக்க அதிபரும், டெமக்ரடிக் கட்சி உறுப்பினருமான பாரக் ஒபாமா அமெரிக்காவில் கொரோனா தடுப்பு விவகாரங்களில் ட்ரம்ப் அரசாங்கம் குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டது. உலகளாவிய நெருக்கடியின் போது சரியான தலைமை இருக்க வேண்டியதன் அவசியத்தை ட்ரம்பின் நடவடிக்கைகள் உணர்த்தியுள்ளன எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதற்கு பதிலாக ட்ரம்ப்போ ஒபாமா அதிபராக இருந்த போது அறிவித்த காப்பீட்டு திட்டத்தில், முறைகேடு நடந்துள்ளன. ஒபாமாவும், அவரது ஆதரவாளர்களும் என் வெற்றியில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார். இந்த ஆண்டு அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்குப் போட்டியாக ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனுக்கு ஆதரவாக ட்ரம்ப்பை எதிர்த்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிரச்சாரம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் இப்போதே பிரச்சாரங்களை தொடங்க இரு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.