“பெற்றோர்கள் கைவிடாமல் எங்களை ஏற்க வேண்டும்!”

Filed under: தமிழகம் |

வருடாவருடம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறும். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக இத்திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று சூழல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த 5ஆம் தேதி சாகை வார்த்தல்‌ நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

கூத்தாண்டவர் கோயிலின் முக்கிய நிகழ்வான மிஸ் கூவாகம், தாலி கட்டிகொள்ளும் நிகழ்வு, தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பாடலுக்கேற்ப நடனமாடி அசத்தினார்கள்.

அழகிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேரும் இறுதி சுற்றில் தமிழ் கலாசார உடை அணிந்து நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொது அறிவுத்திறன் போட்டியில் மூன்று பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு மிஸ் கூவாகம் அழகி பட்டம் வழங்கப்பட்டது.

மிஸ் கூவாகம் போட்டியில் சென்னையை சார்ந்த மெஹந்தி முதல் இடத்தையும், திருச்சியை சார்ந்த ரியானா சூரி இரண்டாம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த சாக்‌ஷி ஸ்வீட்டி மூன்றாம் இடத்தினை பிடித்து மிஸ் கூவாகம் பட்டத்தினை வென்றனர்.

முதலிடம் பிடித்த மெஹந்தி, நான் விமானப் பணிப் பெண் பயிற்சி முடித்து தற்போதுதான் முதல் முதலாக அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ளேன். முதல் போட்டியிலேயே மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டிருப்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி. திருநங்கைகள் அனைவருமே வாழ்க்கையில் முன்னேற நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும். சட்ட அங்கீகாரத்துடன் பெற்றோர் அனைவரும் எங்களை ஏற்க வேண்டும். அவ்வாறு செய்தால் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் மேலும் மேலும் நிறைய சாதிக்க முடியும்,” என மிஸ் கூவாகம் பட்டம் வென்ற மெஹந்தி தெரிவித்தார்.