வழிபாட்டு தளங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கத்தினர் நன்றி!

Filed under: அரசியல்,சென்னை,தமிழகம் |

தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் உரிய நெறிமுறைகளுடன் திறக்கக்கோரி தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் சங்கத்தினர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையில் கூறப்பட்டிருந்த விபரமாவது.

கொரானா குறைந்தும் நாகப்பட்டினம் மாவட்டம் வகைப்பாட்டில் மூன்றாம் நிலையில் நிலவுவதால் இங்கு வழிபாட்டு தலங்கள் திறப்பதில் சிக்கல் நிலவுகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்து இருப்பதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரானா தொற்று குறைந்து இன்னும் வகைபாட்டு பட்டியலில் நீக்காமல் இருப்பதால் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்க கோரி தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசலுக்குள் அசோசியேஷன் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தது .

தென்னிந்தியாவில் மிகப்பெரிய தர்காவான நாகூர் தர்கா நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கொரானா தாக்கம் வகைப்பாட்டு மாவட்டத்தில் மூன்றாம் நிலை மாவட்டமாக இருந்தது. கடந்த வாரம் நாகப்பட்டினத்தில் தொற்று குறைவாக காணப்பட்டது. மேலும் நாகூரில் வரும் ஜூலை 10-ஆம் தேதி முதல் நாகூர் சின்ன ஆண்டகை என்று அழைக்கக்கூடிய ஹஜரத் சையத் முஹம்மத் யூசுப் ரலி அவர்களின் வருடாந்திர உருஸ் நடைபெற இருக்கிறது.

மாண்புமிகு தமிழக முதல்வர், வழிபாட்டு தல நிர்வாகிகள் மற்றும் சுகாதார துறையினருடன் கலந்தாலோசித்து தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களை உரிய நெறிமுறைகளுடன் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையில் தமிழக அரசு சுகாதாரத்துறையினருடன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி தமிழகம் முழுவதும் ஒரே தளர்வுகள் நிலையை அறிவித்து தமிழகம் முழுதும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் வரும் 5-ஆம் தேதி முதல் திறக்க உத்தரவு பிறப்பித்தார்கள். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் தொற்றைத் தவிர்க்கும் வண்ணம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரும் 5ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.

தங்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் உரிய நடைமுறைகளை பின்பற்றி திறக்க ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு தென்னிந்திய தர்காக்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர், மேலும் அரசின் உத்தரவை பொது மக்கள் ஒருங்கிணைந்து பின்பற்றி உரிய சமூக விலகலை கடைபிடித்திடுமாறு கேட்டு கொண்டனர். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அசோசியேஷன் சார்பாக செய்யது முகமது கலிபா சாஹிப், முஜம்மீல் ஜாபர், அபூமூஸா காதிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.