கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி தயார்: எனது மகளும் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார் – அதிபர் புதின் நெகிழ்ச்சி!

Filed under: உலகம் |

கொரோனாவை எதிர்க்கும் தடுப்பூசி மருந்தை உலகில் முதலில் ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். முதலில் தடுப்பூசியை தயாரித்து ரஷ்யா சாதனை படைத்துள்ளது என அதிபர் புதின் அறிவித்துள்ளார். இதை அவருடைய மகளில் ஒருவர் போட்டுகொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இந்த வைரசால் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதை ஒழிக்க பல உலக நாடுகள் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியை செய்து வருகிறது.

தற்போது ரஷ்யா கொரோனா வைரஸை ஒழிக்கும் தடுப்பூசி மருந்தை உலகின் முதலாவதாக ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசி மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என புதின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் கொரோனவுக்கான தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்துள்ளது. உலக அளவில் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து ரஷ்யா பதிவு செய்துள்ளது.

இது பற்றி புதின் கூறியது; உலகின் முதல் தடுப்பூசி மருந்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இந்த மருந்தை கண்டுபிடிக்கும் வேலையில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. இந்த மருந்தை விருப்ப முள்ளவர்கள் போட்டுக்கொள்ளலாம். என்னுடைய மகள் ஒருவர் இந்தத் தடுப்பூசி மருந்தை செலுத்தி கொண்டார். இந்த தடுப்பூசி மருந்து சிறப்பாகச் செயல்படுகிறது என உறுதியாகியுள்ளது.

இந்த தடுப்பூசி மருந்தை சுகாதார ஊழியர்களுக்கு பயன்படுத்த முன்னுரிமை கொடுக்கப்படும் என ரஷ்யா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.