இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் – முதல்வர் பழனிசாமிக்கு பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் வேண்டுகோள்!

Filed under: தமிழகம் |

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல். முருகன் கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் எல். முருகன் எழுதியது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அத்தியாவசியத் தேவையின்றி செல்வதை கட்டுப்படுத்தும் விதமாகவும், அதனால் மற்றவர்களுக்கு கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகவும் அமுல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறை தமிழகத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது.

ஆனால், இப்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அதிகமாக்கப்பட்டுள்ளது. வேலை தொழில் நிமித்தமாக மக்கள் மாவட்டத்திற்குள்ளேயோ, வெளியேயோ சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பலர் மிக மிக அவசியமான தேவைகளுக்குக் கூட இ-பாஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும், சிலர் குறுக்கு வழியில் ஊழல் செய்து இ பாஸ் வழங்க முயற்சிப்பதும், போலி இ-பாஸ் வழங்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றன.

கணவன் மனைவி சந்திக்க முடியாத நிலை பெற்றோர் பிள்ளைகள் சந்திக்க முடியாத நிலை என்று இது போன்று எண்ணற்ற உறவுகள், இ பாஸ் முறையால் அவதிக்கு உள்ளாகும் குமுறல்கள் நமக்கு செய்திகள் வந்து சேர்கின்றன.

மேலும் இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ-பாஸ் வழங்கும் முறை கிடையாது எனவே, மக்கள் படும் சிரமம் கருதி தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு டாக்டர் எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.