வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

Filed under: தமிழகம் |

லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் போது இந்திய – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் தமிழ்நாடு ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் வீரமரணம் அடைந்துள்ளார். ராணுவ வீரர் பழனிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறியது: லடாக் பகுதியில் சீனா ராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பழனி 22 வருடமாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு வயது 40 ஆகும். அவருக்கு பத்து வயது மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர். அவருடைய மனைவியும் மற்றும் குழந்தைகளும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.