ஜம்மு – காஷ்மீரில் சரணடைய மறுத்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

Filed under: இந்தியா |

ஸ்ரீநகர், செப் 23:
ஜம்மு – காஷ்மீரில் நேற்று சரணடைய மறுத்த பயங்கரவாதியை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு – காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள காஷ்வா கிராமத்தில், கிராம மக்கள் மீது பயங்கரவாதி அனாயத் அஷ்ரப் தார் என்பவர், தாக்குதல் நடத்தி வந்ததாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் சேர்ந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு நம் பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர்.

அங்கிருந்த பயங்கரவாதி அனாயத்திடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டது. எனினும், அவர் சரணடைய மறுக்கவே, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அனாயத் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கியும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.