மாற்றுத் திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை புகார்!

Filed under: சென்னை,விளையாட்டு |

இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பாக சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் வீச்சு போட்டியில் கோவை உருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தீபீகா ராணி, மாற்றுத் திறனாளியான தீபீகா, தங்கம், வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு ஒன்றை அளிக்க வீல் சேரில் வந்த, மாற்றுத்திறனாளி தீபிகா ராணி செய்தியாளர்களிடம், “தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதில் குளறுபடிகள் நடக்கிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவே மனு அளிக்க வந்துள்ளேன். சமீபத்தில் நடந்த ஏசியன் கேம்ஸ் போட்டிகளுக்கு முறைப்படி தகுதி தேர்வு நடைபெறவில்லை. உலக தரவரிசையில் 49வது இடத்தில் இருக்கும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது போன்று பல திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. சரியான தகவல்களை மத்திய மாநில விளையாட்டு ஆணையங்கள் வழங்க வேண்டும். பல திறமையான வீரர்கள் இருந்தும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால், வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. இதை அரசு கவனத்தில் கொள்ளும் பட்சத்தில் சர்வதேச அளவில் இன்னும் பல திறமையான மாற்றுத்திறனாளி வீரர்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார்.