வேளாண் சட்டங்களை ரத்து செய்ய போவதில்லை : ராம்நாத் கோவிந்த்

Filed under: அரசியல்,இந்தியா |

புது தில்லி: மத்திய அரசு புதிதாக நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது.

நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் இலக்கு என்பது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது மட்டுமல்ல, உலக நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகும்.

நமது கிராமப்புறங்களை வலுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்களது விலை பொருள்களுக்கு உரிய விலையை பெறுவதை அரசு உறுதி செய்யும்.

மத்திய அரச கொண்டு வந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் பலனடைந்துள்ளனர். கரோனா பொதுமுடக்கக் காலத்திலும் வேளாண் உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்டது.

புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படாது. விவசாய சட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

மிகப்பெரும் விவாதங்களை நடத்தியபிறகே நாடாளுமன்றம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மூன்று புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.

தற்போது மூன்று புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக எந்த முடிவை எடுத்தாலும் அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்.

குடியரசு நாளன்று, மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த முழு சுதந்தரித்தை அளித்துள்ளது, அதே வேளையில் சட்டம் மற்றும் ஒழுங்கையும் அனைவரும் மதித்து நடக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறது என்று ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.